×

குன்றத்தூர் முருகன் கோயிலில் நாளை 54 ஆண்டுக்கு பிறகு சூரசம்ஹாரம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குன்றத்துார்: குன்றத்தூர் முருகன் கோயிலில் நாளை 54 ஆண்டுக்கு பிறகு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக பூந்தமல்லி, பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. குன்றத்தூரில் மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கடந்த 54 ஆண்டு காலமாக இக்கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்தது. மீண்டும் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தவேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக அரசுக்குகோரிக்கை வைத்து வந்தனர். இதன் பலனாக தற்போது சூரசம்ஹாரம்நிகழ்ச்சி இந்தாண்டு நடத்த முடிவு செய்துவிட்டது. இதன் ஒரு கட்டமாக முருகப்பெருமான் மலை அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோயிலில் இன்று மாலை 4 மணிக்கு முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை மாலை 4 மணிக்கு குன்றத்தூர் முருகன் கோயில் உள்ள மலை அடிவாரத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

54 ஆண்டுக்கு பிறகு நாளை மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை காண சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரக்கூடும் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சூரசம்ஹாரம் நடைபெறும் இடம் இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து சமன் செய்யும் பணி நடந்தது. மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் நலனுக்காக தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற உயிர்காக்கும் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து குன்றத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன் மற்றும் செயல் அலுவலர் கன்யா ஆகியோர் தெரி வித்துள்ளனர். விழா ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post குன்றத்தூர் முருகன் கோயிலில் நாளை 54 ஆண்டுக்கு பிறகு சூரசம்ஹாரம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Surasamharam ,Kunradthur Murugan Temple ,Kunradathur ,Kunradathur Murugan Temple ,Poontamalli ,Pallavaram ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு